ஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா

தினகரன்  தினகரன்
ஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா

டோக்கியோ: ஜப்பான் நாட்டின்  புதிய மன்னராக, பட்டத்து இளவரசரான  நருஹிடோவுக்கு நேற்று முடிசூட்டப்பட்டது. ஜப்பான் நாட்டின் மன்னர்  அகிஹிடோ, வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற வேண்டி கடந்த மே மாதம் பதவி  விலகினார். ஜப்பான் மன்னர் பரம்பரையில் பதவியில் இருக்கும் போதே, மன்னர் தனது  பட்டத்தைத் துறப்பது 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை.இதை்யடுத்து, அகிஹிடோவின் மகனும், இளவரசருமான நருஹிடோ, ஜப்பானின் 126வது மன்னராக அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி டோக்கியோவில் உள்ள  இம்பீரியல் அரண்மனையில் நேற்று நடைபெற்றது. சம்பிரதாய முறைப்படி நருஹிடோவுக்கு முடிசூட்டப்பட்டது. மன்னர் தம்பதிக்கு 17 வயதில் அய்கோ என்ற மகள் உள்ளார். நருஹிடோவின் தம்பியும், தற்போதைய இளவரசருமான அகிஷினோவுக்கு 13 வயதில் ஹிசாகிடோ என்ற மகன் இருக்கிறார். நருஹிடோவை தொடர்ந்து இவரே அடுத்து மன்னராகும் தகுதி உடையவர் ஆவார். முடிசூட்டு விழாவையடுத்து பிரமாண்ட விருந்து நடந்தது. இதில்  180  நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் கலந்துகொண்டனர்.ஜனாதிபதி ராம்நாத் பங்கேற்புஏழு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிலிப்பைன்ஸ், ஜப்பான் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அக்டோபர் 22ம் தேதி நருஹிடோ முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் டோக்கியோவை வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத், மன்னர் நருஹிடோ முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர், விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டார்.

மூலக்கதை