இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சித்தும், முடியவில்லை: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வேதனை

தினகரன்  தினகரன்
இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சித்தும், முடியவில்லை: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வேதனை

இஸ்ரேல்: இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சித்தும், முடியவில்லை என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வேதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை கைப்பற்றவில்லை. இதையடுத்து, எதிர்கட்சியான கன்ட்சுவின் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை உருவாக்கும்படி குடியரசு தலைவர் ரூவென் ரிவ்லின், பிரதமர் பெஞ்சமினுக்கு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தனது முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறி பெஞ்சமின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மறுதேர்தலை தவிர்க்கும் விதமாக பல வகையிலும் கூட்டணி அரசு அமைக்க முயற்சித்ததாகவும், ஆனால் கன்ட்ஸ் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் தனது முயற்சி தோல்வியடைந்ததாக கூறிய பெஞ்சமின், இஸ்ரேலி அரப் கட்சி எம்எல்ஏக்களுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்க கன்ட்ஸ்  தீவிரம் காட்டுவதாகவும், இந்த கூட்டணி அமைந்தால், தீவிரவாத செயல் ஊக்குவிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.  பெஞ்சமின் விலகியதை அடுத்து, கன்ட்ஸுக்கு 28 நாள் கால அவகாசம் வழங்கி ஆட்சி அமைக்க வரும்படி அந்நாட்டு  குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மூலக்கதை