இந்திய ராணுவ தாக்குதல் பொய் சொல்கிறது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்
இந்திய ராணுவ தாக்குதல் பொய் சொல்கிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பலியாயினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இதில் 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயியிருக்கலாம் என இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியிருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறியதாவது: மிகவும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இந்திய ராணுவ தளபதி, 3 தீவிரவாத முகாம்களை அழித்ததாக கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. அங்கு எந்த முகாம்களும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டு தூதர்களையோ அல்லது பத்திரிக்கையாளர்களையோ சம்பவ இடத்துக்கு தாராளமாக அழைத்துச் சென்று தாக்குதலை நிரூபிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தபால் சேவை துண்டிப்புஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான தபால் சேவைகளை எந்த முன்னறிவிப்பும் இன்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘இரு நாடுகள் இடையேயான தபால் சேவையை, எந்த முன்னறிவிப்பும் இன்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இந்த முடிவு சர்வதேச தபால் விதிமுறைகளுக்கு எதிரானது’’ என்றார்.

மூலக்கதை