நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை

தினமலர்  தினமலர்
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை

சிட்னி:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'குவாண்டாஸ்' நிறுவனம், நீண்ட துாரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணிநேரம் வரை பறக்க முடியும்.அதற்கேற்ற சோதனைகள் நடத்திய அந்நிறுவனம், கடந்த வெள்ளியன்று, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, இந்த விமானத்தின் முதல் சேவையை துவக்கியது.


அதன்படி, அமெரிக்காவின். நியூயார்க் நகரிலிருந்து, கடந்த, 18ம் தேதி இரவு, 49 பேருடன் புறப்பட்ட, குவாண்டாசின், 'போயிங், 787-9' ரக விமானத்தில், எங்கும் நிற்காமல் பயணிக்கும் வகையில், போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. விமானம் புறப்பட்டவுடன், பயணியர் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை, சிட்னி நேரத்துக்கு மாற்றி வைத்தனர்.பயணியர், விமானிகளின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக, இரவு நேரத்தில், விமானம் புறப்பட்டவுடன், உணவு அளிக்கப்பட்டு பயணியர் துாங்குவதற்கு அறிவுறுத்தப்படுவர்.ஆனால், இந்த விமானத்தில், மதிய உணவு அளித்து, ஆறு மணி நேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணியருக்கு இரவு உணவு அளித்து, துாங்க அனுமதிக்கப்பட்டனர்.அதாவது, கிழக்கு ஆஸ்திரேலியாவில் இரவு வரும் வரை, அனைவரையும் விழித்திருக்க வைத்து, உணவு வழங்கப்பட்டது. ஆறு மணி நேரத்துக்குப் பின், அவர்களுக்கு, கார்போஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை விளக்குகளைப் பார்க்காமல் துாங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

விமானத்தை இயக்குவதற்கு, வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில், இந்த விமானத்தை நான்கு விமானிகள், மாறி மாறி இயக்கினர். இந்நிலையில், 19 மணி நேரத்துக்கும் அதிகமாக வானில் பறந்து, நேற்று காலை, சிட்னியில் விமானம் தரையிறங்கியது.

குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,ஆலன் ஜோய்ஸ் கூறுகையில், ''எங்கும் நிற்காமல், 19 மணிநேரத்துக்கும் மேலாக, விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. ''பயணியரையும், விமானிகளையும், எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்,'' என்றார்.

குவாண்டாஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய பல்கலைகளுடன் கூட்டு வைத்து, 19 மணிநேர இடைவிடாது மேற்கொள்ளும் பயணம், மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்தது. பயணியருக்கு வழங்கும் உணவு, குடிப்பதற்குக் கொடுக்கும் பானம், வெளிச்சம் ஆகியவை சரியாக இருந்தால், உடல்நிலையில் பாதிப்பு இருக்காது என்பது, இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை