மகாராஷ்டிரா, அரியானா பேரவைக்கு இன்று தேர்தல்: அக்டோபர் 24ல் வாக்கு எண்ணிக்கை

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா, அரியானா பேரவைக்கு இன்று தேர்தல்: அக்டோபர் 24ல் வாக்கு எண்ணிக்கை

மும்பை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைகளுக்கு இன்று ேதர்தல் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் உட்பட துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் கடந்த ெசப்டம்பர் 21ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ - சிவசேனா ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இது தவிர பிரகாஷ் அம்பேத்கர் தலையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.), ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தம் 288 தொகுதிகளில் பாஜ 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிடும் சிறிய கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இதில் அடங்குவர். சிவசேனா 124 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 147 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை எம்.என்.எஸ். கட்சி 101 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-16, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-8, பகுஜன் சமாஜ் கட்சி-262 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 1,400 சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களான முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் அசோக் சவான் மற்றும் பிருத்விராஜ் சவான், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர பாலாசாகேப் தோரத், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 235 பேர் பெண்கள். வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கடந்த இரண்டு வாரமாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தீவிர பிரசாரம் செய்தனர்.சிவசேனா வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே பிரசாரம் செய்தனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் அவருடைய கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிவடைந்தது. இதையடுத்து 288 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இதேபோல் அரியானா மாநிலத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. 1.83 கோடி வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். இதில் 89 லட்சம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களின் வாக்குகள்தான் ஆட்சியை நிர்ணயிக்க உள்ளது.இங்கு ஆளும் பாஜ மீண்டும் முதல்வர் மனோகர் கட்டாரியா தலைமையில் களம் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர். எனினும், உடல்நலக்குறைவால் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பிரசாரம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இவ்விரு கட்சிகளை தவிர, ஷிரோன்மணி அகாலி தளத்துடன் இணைந்து இந்திய தேசிய ேலாக் தளமும், அக்கட்சியிலிருந்து பிரிந்த துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சியும், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்குகின்றன. பாஜ தரப்பில் பிரபல விளையாட்டு வீரர்களான பபிதா போகத், யோகேஷ்வர் தத், சந்தீப் சிங் மற்றும் டிக்டாக் பிரபலம் சோனாலி போகத் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இம்மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. இரு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்பட உள்ளன. இருமாநிலங்களிலும் தேர்தலையொட்டி உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை