பொறுப்பும்; கடமையும் இருக்கிறது: லாஸ்லியா

தினமலர்  தினமலர்
பொறுப்பும்; கடமையும் இருக்கிறது: லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா. துவக்கத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பிக்பாஸ் வீட்டில் கொட்டம் அடித்துக் கொண்டிந்த லாஸ்லியா, இயக்குநர் சேரனுடன் மனக்கசப்பு, நடிகர் கவினுடன் காதல், நடிகை சாக்ஷ் அகர்வாலுடன் மோதல் என தன்னுடைய பன் முகத்தையும் காட்டினார்.

இதனால், துவக்கத்திலேயே வெளியேற்றப்படுவார் என்ற நிலையையும் தாண்டி, அவர் கடைசி சுற்று வரையில் வந்து விட்டார். இறுதியில் டைட்டில் வின்னராகக் கூட லாஸ்லியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தர்ஷன் டைட்டில் வின்னராகவும், சாண்டி ரன்னராகவும் வந்துவிட, லாஸ்லியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியடைந்ததை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடினர். அந்த கொண்டாட்டத்தில் கவினுடன், லாஸ்லியா கலந்து கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாடினார். தற்போது, லாஸ்லியா இலங்கைக்கு திரும்பியிருக்கிறார். அவரை, அங்கு வரவேற்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. விமான நிலையத்திலேயே ரசிகர்கள் கூட, லாஸ்லியாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து லாஸ்லியா கூறியிருப்பதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சி, என்னைப் போன்ற சாதாரணமான பெண்ணுக்கும் மிகப் பெரிய புகழ் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நான் சென்னை புறப்பட்டு வந்த போது, இலங்கையில் என்னை பெரிய அளவுக்கு யாருக்கும் தெரியாது. ஆனால், இன்று, இலங்கையிலும் நான் மிகப் பெரிய புகழை அடைந்திருக்கிறேன். அதற்காக, பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், என்னை நேசித்த - நேசிக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப் பெரிய பொறுப்பும்; கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மூலக்கதை