கார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

தினமலர்  தினமலர்
கார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

வாஷிங்டன் : இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் வருமான வரியை குறைப்பது என அண்மையில் இந்தியா எடுத்த முடிவு, முதலீடுகள் குறித்த சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.இருப்பினும், இந்தியா தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிதி நிலைமைகளின் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் பன்னாட்டு நிதியம் கூறியுள்ளது.இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின், ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் சாங்யோங் ரீ கூறியதாவது:இந்தியாவில் இன்னும்நிதி நெருக்கடிகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.


எனவே, இந்தியா கவனமாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை, முதலீடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த இரண்டு காலாண்டுகளில், மந்த நிலையை எட்டியது. இதை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 7.0 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் முதலீட்டை புதுப்பிப்பதற்கு நிச்சயம் உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.பன்னாட்டு நிதியத்தின், ஆசிய மற்றும் பசிபிக் துறையின், துணை இயக்குனர் அன்னே மேரி குல்ட் வுல்ப் கூறியதாவது:இந்தியா, அந்நாட்டினுடைய வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பிரச்னைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதனம் வழங்குவது உள்ளிட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு முன்னேற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பிரச்னைகள் ஓரளவு தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

அவற்றின் நிதி மூலதன பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அரசும் இது குறித்து அறிந்துள்ளது.சிக்கல்கள் இருக்கும்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் நடைமுறைகளில் அதிக கவனம் தேவைப்படுகிறது.இந்தியா மிக அதிகளவிலான கடனை கொண்டுள்ளது. நிதி ஒருங்கிணைப்புக்கு அது முக்கியத்துவம் வழங்க வேண்டும். இருப்பினும், கூட்டாட்சி அமைப்பில் நிதி ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. நிதி கட்டமைப்பு மற்றும் சவால்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.பன்னாட்டு நிதியத்திடம் பிராந்திய பயிற்சி மையங்கள் உள்ளன. இவை, மாநில அளவில் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற துவங்கி உள்ளன.

இந்தியாவை பொருத்தவரை, மாநில அளவிலான நிதி நடவடிக்கைகளை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறோம். இது கவலை அளிக்கும் விஷயம் தான் என்றாலும், அதிகாரிகள் அதை தீவிரமாக எடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை