பி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மும்பை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்!

தினகரன்  தினகரன்
பி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மும்பை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்!

புதுடெல்லி : ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பை சயான் கோலிவாடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4355 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதனால் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது. வங்கியில் பணம் போட்டவர்கள் தினமும் போராடி வருகின்றனர். சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை வந்தபோது அவரையும் முற்றுகையிட்டனர். இந்த வங்கியில் ரூ.2500 கோடி அளவுக்கு எச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை. இந்த கடன் திரும்ப வராததால்தான் வங்கியின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர் ராகேஷ் வாத்வான், சரங் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரி, பிஜோன் மிஷ்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் மும்பை நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவால் பி.எம்.சி வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை