நெல்லை அருகே பயங்கரம் 7ம் வகுப்பு மாணவியை கடத்தி கொடூர கொலை: 2 வாலிபர்கள் சிக்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெல்லை அருகே பயங்கரம் 7ம் வகுப்பு மாணவியை கடத்தி கொடூர கொலை: 2 வாலிபர்கள் சிக்கினர்

நெல்லை: நெல்லை அருகே 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர், பாலியல் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதி உவரி போலீஸ் சரகத்தில் உள்ளது கூட்டப்பனை கிராமம்.

இங்கு மீன்பிடி தொழில் பிரதானமாக நடக்கிறது. இந்த ஊரைச்சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (44) மீனவர்.

இவரது மனைவி டிமித்தா(42). இவர்களது 3வது மகள் (12), அதே ஊரில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி அதன்பிறகு வெளியில் விளையாடச்சென்றார். இரவு 8 மணியாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடினர்.

ஆனால் கிடைக்கவில்லை. அதே ஊரில் லிவிங்ஸ்டன் தம்பி வீடு இருப்பதால் மாணவி, சித்தப்பா வீட்டிற்கு போய் படுத்திருப்பாள் என பெற்றோர் நினைத்தனர்.

இதனால் நேற்று காலை விடிந்ததும் தங்கள் மகள் அங்கு வந்தாளா? என சித்தப்பா வீட்டிற்கு சென்று பார்த்தாார்கள். ஆனால் அவள், அங்கு செல்லவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து மீண்டும் பெற்றோர், மாணவியை பல இடங்களில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை.

இதற்கிடையில் நேற்று மாலை அதே ஊரைச்சேர்ந்த இரு வாலிபர்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.

அதில் ஒருவர், நீ போலீசில் மாட்டத்தான் போகிறாய் என கத்தி பேசியிருக்கிறார். அது அந்த வழியாக சென்றவர்கள் காதில் விழுந்துள்ளது.

அவர்கள் வாலிபரிடம் வந்து, எதற்காக போலீசில் மாட்டத்தான் போகிறாய் என யாரை சொல்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்காமல் அந்த வாலிபர்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டனர்.

இது சந்தேகத்தை ஏற்படுத்தவே உடனே உவரி போலீசிற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இரவு 9 மணியளவில் போலீசார் கூட்டப்பனை சென்று தேடிப்பார்த்தனர்.

அப்போது காணாமல் போன மாணவி, அவர்கள் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டு காம்பவுண்ட்டிற்குள் இறந்து கிடப்பதை பார்த்தனர். அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டனர்.

அவர் உடலில் தொடை மற்றும் மார்பில் கடித்து குதறிய காயங்கள் இருந்தது. மேலும் அவரது ஆடை களையப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகரபிரசாத் கூட்டப்பனை சென்று சம்பவ இடத்தை பார்த்தார். மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்சித்திருக்கலாம் அப்போது மாணவி காமக்கொடூரன்கள் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது அடித்து உதைத்திருக்கலாம், அடி தாங்காமல் அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்துள்ளது.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இறுதி முடிவு தெரியவரும் என்று போலீசார் கூறினர். இதற்கிடையில் இரவோடு இரவாக, நீ போலீசில் மாட்டிக்கொள்வாய் என பேசிய இரு வாலிபர்களையும் போலீஸ் நிலையம் பிடித்துச்சென்றனர்.

அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடக்கிறது. சிறுமி கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உவரி, கூட்டப்பனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் வீடு

கொலையான மாணவி இறந்து கிடந்த இடம் ஆசிரியர் ஒருவரது வீட்டு காம்பவுண்ட் ஆகும். அந்த ஆசிரியர் திருச்சி அருகே உள்ள இலுப்பூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.

குடும்பத்துடன் அங்கு வசிப்பதால் இங்குள்ள வீட்டை பூட்டிபோட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 11ம்தேதி தலைமையாசிரியர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்து போய் உள்ளார்.

பூட்டிய வீடு என்பதால் கொலையாளிக்கு வசதியாக போய்விட்டது. ஆசிரியர் வீட்டின் காம்பவுண்ட் கேட்டில் பூட்டு போட்டிருந்தனர்.

அதை உடைத்துதான் மாணவியை கொண்டு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை மாணவி அங்குள்ள தெருக்களில் சுற்றி வருவதை சிலர் பார்த்துள்ளனர்.

அதன் பிறகே காமக்கொடூரன் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

.

மூலக்கதை