காளவாசல் - பைபாஸ் ரோடு பாலம் ஜனவரியில் திறப்பு! நடவடிக்கை தீவிரம்
மதுரை: மதுரை காளவாசல் - பைபாஸ் ரோடு பாலப்பணியை விரைவாக முடித்து 2020 ஜனவரிக்குள் திறக்க மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரூ.54 கோடி மதிப்பில் இப்பால கட்டுமான பணியை முதல்வர் பழனிசாமி 2018 ஜூலை 12ல் துவக்கினார். பணிகள் கடந்த அக்.,12 ல் முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் மரங்களை அகற்றுதல், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் பாலத்தை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் முக்கிய சந்திப்பாக இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நெடுஞ்சாலை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில், செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் பால பணிகளை ஆய்வு செய்தனர். காளவாசல் சந்திப்பின் வடபுறம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தென்புறம் சரிவு சாலை அமைத்தல், துாண்களை இணைத்தல் பணி நடக்கிறது. பணிகளை 2020 ஜனவரிக்குள் முடித்து பாலத்தை திறக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.