2022ல் அ.தி.மு.க., ஆட்சி ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கடிதம்

தினமலர்  தினமலர்
2022ல் அ.தி.மு.க., ஆட்சி ஓ.பி.எஸ்.,  இ.பி.எஸ்., கடிதம்

சென்னை:'அ.தி.மு.க., பொன் விழா ஆண்டான, 2022ல், ஆட்சி பொறுப்பில் இருக்க, இப்போதே நம் பணிகளை துவக்குவோம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அவர்கள் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க., 48ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் ரீதியாக, எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும், அவற்றை எதிர்கொண்டு, நம்மை எதிர்த்தோரும், பாராட்டும் வகையில், கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறோம்.

சீன அதிபரும், பிரதமரும், மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பு, தமிழகத்தின் நிர்வாகத் திறமையை, உலகுக்கு பறைசாற்றி உள்ளது. சட்டம் -- ஒழுங்கு பராமரிப்பில், தமிழகம் தலைசிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இன்னும் சில நாட்களில், விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது; அதில் வெற்றி பெற உழைப்போம். விரைவில் நடக்க உள்ள, உள்ளாட்சி தேர்தலில், அனைத்து நிலைகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற, நம் பணிகளை உடனடியாக துவக்குவோம்.

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அதேபோல், கட்சியின், 50வது, பொன்விழா ஆண்டான, 2022ல், கட்சி ஆட்சி பொறுப்
பில் இருக்க, இப்போதே, நம் பணிகளை துவக்குவோம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை