அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று முடிகிறது: நவம்பர் 4ல் தீர்ப்பு?
புதுடெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும், தீர்ப்பு நவம்பர் 4ல் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி விசாரித்து வருகிறது. அடுத்த மாதம் 17ம் தேதி ரஞ்சன் கோகாய் பதவி ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்து அமைப்பான ராம் லாலா சார்பில் வக்கீல் பராசரன் வாதம் செய்தார். அவர் வாதிடுகையில், `‘அயோத்தியில் மட்டும் 60 மசூதிகள் வரை உள்ளன. அதில் எந்த மசூதியிலும் இஸ்லாமியர்கள் தொழுகை செய்யலாம். ஆனால், இந்துக்கள் ராமர் பிறந்த இடமாக நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தை மாற்ற முடியாது,’’ என்றார்.இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், `இன்று 39வது நாள் விசாரணை முடிந்துள்ளது. நாளையுடன் விசாரணை நிறைவடைந்து விடும். வழக்கின் தீர்ப்பு நவம்பர் 4 அல்லது 5ம் தேதி வழங்கப்படும்’,’ என அறிவித்தனர்.