போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை

திருவண்ணாமலை: போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி புனிதவதி(35).

வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா  மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(32). இருவரும், செய்யாறு தாலுகா மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த 26. 9. 2013 முதல் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பள்ளியில் அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஜெயக்குமார் ஆண்டு ஆய்வு நடத்தினார்.

மேலும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, பணி நியமன ஆணை, கல்வித் தகுதி உள்ளிட்ட ஆவணங்களை  பார்வையிட்டார்.

அப்போது, ஆங்கில ஆசிரியர் விஜயகுமார், சமூக அறிவியல் ஆசிரியை புனிதவதி ஆகியோர் கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர்  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து ெகாடுத்தது தெரியவந்தது. எனவே, இருவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.   மேலும் இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் 1 கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்னேஷ்பிரபு, போலி ஆவணம் கொடுத்து ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த புனிதவதி மற்றும் விஜயகுமார்  ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

.

மூலக்கதை