பெசன்ட்நகரில் வாடகை தராததால் ஆட்டோவை திருப்பி கேட்டவருக்கு சரமாரி வெட்டு: டிரைவர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெசன்ட்நகரில் வாடகை தராததால் ஆட்டோவை திருப்பி கேட்டவருக்கு சரமாரி வெட்டு: டிரைவர் கைது

வேளச்சேரி: தனது 2 ஆட்டோக்களை திருப்பி தரும்படி கேட்டவரை ஒரு ஆட்டோ டிரைவர் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர், வண்ணாந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன் (45). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் 2 ஆட்டோக்கள் வாங்கினார்.

பின்னர்  அந்த ஆட்டோக்களை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (42) என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களாக அந்த 2 ஆட்டோக்களுக்கான வாடகை தராமல் சீனிவாசன் ஏமாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த 2  ஆட்டோக்களையும் சீனிவாசன் விற்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை வாசுதேவன் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கோயில் அருகே கடற்கரையில் சீனிவாசன் நின்றிருப்பது வாசுதேவனுக்கு  தெரியவந்தது.

அவரிடம் சென்று, தனது 2 ஆட்டோக்களை திருப்பி தரும்படி வாசுதேவன் வலியுறுத்தி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமான சீனிவாசன், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாசுதேவனை சரமாரியாக  வெட்டியுள்ளார். இதனால் வாசுதேவன் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

இதை பார்த்ததும் சீனிவாசன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு படுகாயம் அடைந்த வாசுதேவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று கத்தியால் சரமாரி வெட்டிய ஆட்டோ டிரைவர் சீனிவாசனை கைது செய்தனர்.

பின்னர்  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

.

மூலக்கதை