சவரன் ரூ.29,376-க்கு விற்பனை: பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்கம் தொடரும்: உலக தங்க கவுன்சில் அறிக்கை

தினகரன்  தினகரன்
சவரன் ரூ.29,376க்கு விற்பனை: பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்கம் தொடரும்: உலக தங்க கவுன்சில் அறிக்கை

லண்டன்: நடப்பாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தங்கம் விலையில் ஏற்படும்,  ஏற்றம், இறக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்க நிலை தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 750 முதல் 800 ரன் அளவிற்கு இருக்கும் என உலக தங்க கவுன்சில்  ஏற்கனவே கணித்திருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 761 ரன் அளவிற்கு தங்கம் வாங்கப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு  சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26,000 ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27,000, 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும்  குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் வரும் பண்டிகை  காலம் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக தங்க விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு  ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 40 டன் தங்கம் விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு 50 சதவீத விற்பனை குறையும் என இந்திய தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை