சிலிண்டர் வெடித்து 13 பேர் பரிதாப பலி
மாவ்: உத்தரப் பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தில் உள்ள வாலித்பூர் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் இருந்தது. இங்குள்ள வீட்டில் நேற்று காலை வழக்கம்போல் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாக 2 மாடி கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 2 வீடுகளும் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மேலும், இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.