மின் வாகன நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

தினமலர்  தினமலர்
மின் வாகன நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

புதுடில்லி:மின்சார வாகன, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘டார்க் மோட்டார்ஸ்’ நிறுவனத்தில், ரத்தன் டாடா முதலீடு செய்ய உள்ளார். இருப்பினும், அவர் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில், ரத்தன் டாடா முதலீடு செய்ய இருக்கும் நிலையில், ஏற்கனவே இந்நிறுவனம், ‘பாரத் போர்ஜ்’ நிறுவனத்திடமிருந்தும், ‘ஓலா கேப்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான பவிஷ் அகர்வாலிடமிருந்தும் நிதியை திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைவரான, ரத்தன் டாடா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடந்த சில ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் குறித்த அணுகுமுறையில் கடலளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் வெகு வேகமாக மாறி வருகிறது. இதையடுத்து, டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அணுகுமுறை காரணமாக, அதில் குறிப்பிட்ட அளவு முதலீடு செய்ய இருக்கிறேன்.இவ்வாறு ரத்தன் டாடா தெரிவித்துஉள்ளார்.
டார்க் மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த சில மாதங்களில், மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது.ரத்தன் டாடா முதலீடு செய்ய இருப்பது குறித்து, டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான கபில் ஷெல்கே கூறியதாவது:இந்திய வாகன துறை மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டத்தில் உள்ளது என்ற எங்களுடைய நம்பிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருக்கிறது, ரத்தன் டாடாவின் முதலீடு.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை