யானை தந்தம் வைத்திருந்த வழக்கு குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி நடிகர் மோகன்லால் ஐகோர்ட்டில் மனு
திருவனந்தபுரம்: யானை தந்தங்கள் வைத்திருக்க தன்னிடம் முன் தேதியிட்ட ைலசென்ஸ் உள்ளதால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, நடிகர் மோகன்லால் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள், வீடுகளில் கடந்த 2012ம் ஆண்டு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவரிடம் லைசென்ஸ் இல்லாததால், மோகன்லால் மற்றும் அவருக்கு தந்தங்களை கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையே 2015ல் அரசு உத்தரவின்பேரில் 2011ம் ஆண்டு முன் தேதியிட்ட லைசென்சை வனத்துறை வழங்கியது. இதையடுத்து மோகன்லாலுக்கு எதிரான வழக்கை வனத்துறை கிடப்பில் போட்டது. இந்த நிலையில் மோகன்லால் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி பவுலாேஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் மோகன்லாலை முதல் குற்றவாளியாக்கி வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனு தாக்கல் செய்தார். அதில், தந்தங்கள் வைத்திருக்க முன் தேதியிட்ட லைசென்ஸ் என்னிடம் உள்ளது. எனவே என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் சதி உள்ளது. இந்த குற்றப்பத்திரிகை செல்லாது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே தற்போது இந்த புகாரை எழுப்பியுள்ளனர் என கூறியுள்ளார்.