தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி

புனே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 601 ரன்கள் குவித்தது.

கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 254 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி முதல் மற்றும் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்தும், இந்திய அணியின் ஸ்கோரை எட்டமுடியவில்லை.

அதனால், இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து, கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பின் அடிப்படையில் ரன்களை குவித்தேன்.

எனது எண்ணம் எப்போதும் அணியின் ஸ்கோரை அதிகபட்சமாக உயர்த்த வேண்டும் என்பதுதான். அணியை பற்றி யோசிக்க தொடங்கும் போதுதான், எனக்குள் ஏற்படும் அழுத்தங்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

அணியின் வீரர்கள் சத்தமில்லாத கொண்டாட்டத்தில் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அடுத்த போட்டியில் நாங்கள் சிறு ஓய்வு எண்ணம் கூட இல்லாமல், இதற்கு முன்னர் விளையாடியது போன்றே விளையாடுவோம்.

3-0 என்ற கணக்கில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். எனவே, வரும் 19ம் தேதி ராஞ்சியில் தொடங்கவுள்ள 3வது போட்டியை லேசாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

சீரியசாகவே விளையாடுவோம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை