ராஜிவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் கைதாவாரா?..காங்கிரஸ் புகாரின் மீது 2 பிரிவுகளில் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜிவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் கைதாவாரா?..காங்கிரஸ் புகாரின் மீது 2 பிரிவுகளில் வழக்கு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின்போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரசார் அளித்த புகாரின்பேரில் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஜெயக்குமாரை நேற்று சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தேச ஒற்றுமைக்கும், தேச பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கின்ற செயலாகும்.

இதற்கு ஆதாரத்துடன் ஒலிநாடா வீடியோவும் இருக்கிறது. ஒரு தேசத்தின் முன்னாள் பிரதமரை இன துரோகி என்றும், நாங்கள்தான் படுகொலை செய்தோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், நகர தலைவர் குமார். மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி போலீசார், காங்கிரசார் கொடுத்த வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆய்வு செய்தனர். அதில் அவர் பேசியது உண்மை என்று தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும், சுறுக்கெழுத்து பதிவு செய்யும் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் (இபிகோ 153), மிரட்டல் (இபிகோ 504) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சீமான் மீது திடீரென்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் பரவியுள்ளது. இது இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிபி  அலுவலகத்தில் புகார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் எம்பி,  டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: விக்கிரவாண்டி தொகுதி  இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை  தமிழர்கள் கொன்று புதைத்ததாக வரலாறு எழுதப்பட வேண்டும்  என்று பேசியுள்ளார்.

தானும் மற்றவர்களும் சேர்ந்து ராஜிவ் காந்தியை கொன்று  புதைத்ததாக பேசியுள்ளார். தவறான தகவல்களை பொது மேடையில் பேசிய சீமான் மீது  பிரிவு 121, 302 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மூத்த  ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை வைத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும்  விசாரிக்க வேண்டும். சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த  வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை