யாழ்ப்பாணத்தில் தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு விழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் ஆண்டு விழா  இந்தாண்டு அக்டோபர் 19,20 நாட்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் பல தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

 

வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?

முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர் , பாரிஸ்  

 

வள்ளுவன், நெஞ்சை அள்ளுவன்!

அது என்ன வாய்-மை? மெய்-ம்மை? உண்-மை? மூன்றும் ஒன்று தானே?

“ஆங்கிலத்தில் ஒரே சொல், Truth! ஏன்யா தமிழில் மட்டும், ஒரு சொல்லுக்கு இத்தனை சொல்லு போட்டுக் குழப்பறீங்க? Why can’t u be simple like English? This Tamil is so hard ya!” என்று அங்கலாய்த்துக் கொள்வோர் நம்மிடையே உண்டு!:) வாருங்கள் பார்த்து விடலாம், தமிழின் எளிமையை & குறளின் நுட்பத்தை!

  வாய்மை எனப்படுவது யாதெனின் – யாதொன்றும்    

தீமை இலாத சொலல் (அறம்: வாய்மை: 291)

  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பது அறிவு (பொருள்: அறிவுடைமை: 423)

  நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும் (அறம்: ஊழ்: 373)

 * வாயால் சொல்வது = ‘வாய்’மை * உடம்பாலும் (மெய்யால்) நடந்து காட்டுவது = ‘மெய்’ம்மை * உள்ளத்தாலும் இருப்பது = ‘உண்’மை (உள்+மை)

 

1) வாய்-மை

வாய்மை எனப்படுவது யாது? = தீமை இல்லாத சொலல்!

சொலல் -ன்னா வாயால் தானே சொல்ல முடியும்? அதான் “வாய்”மை என்று பெயர்! வாயால் மட்டுமே உரைக்கப்படுவது வாய்மை!

யாருக்குச் சொலல்? நமக்குத் தீமை வராத சொலல்! அதானே? அல்ல! நம் தன்னலம் பற்றி நல்லாத் தெரியும் ஐயன் வள்ளுவனுக்கு:) அதான் “யாது ஒன்றும்” தீமை வராத -ன்னு சொன்னாரு!  பிறர்க்கு + நமக்கு = யார் ஒருவருக்குமே, “யாது ஒன்றும்” தீமை வராத சொலல்!

வாய்மை எனப்படுவது யாதெனின் – யாதொன்றும்

தீமை இலாத சொலல்!

வாயால் உரைக்கப்படுவது வாய்மை! அது யார் ஒருவருக்கும் எத்தீமையும் இலாததைச் சொலல்!

 

2) மெய்-ம்மை

ஒருவர் “வாய்”மையே சொன்னாலும்… எப்பொருள், யார்யார் “வாய்”க் கேட்பினும்… அவர்கள், “மெய்யாலும்”  அப்படி நடந்து காட்டுறாங்களா? இல்லை வெறும் வாய்-அளவில் தானா? அவர்கள் உரைப்பது உதட்டளவுக் கொள்கையா? உயிரளவுக் கொள்கையா?

மெய் = உடல்; உடலாலும் (தன் செய்கைகளாலும், கடைப்பிடித்தலாலும்) நடந்து காட்டுவது! அந்த  “மெய்ப்”- பொருளைக் காண்பது அறிவு!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பது அறிவு 

பிறர் வாயால் பலப் பல உரைத்தாலும், அவர்களின் மெய்யான கடைப்பிடித்தல்களால், அவை தகுமா? தகாதா? என்ற மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு ஆகும்!

3) உண்-மை

இப்படி, வாயாலும் மெய்யாலும் பல இருக்கலாம்!  அவையெல்லாம் புறம் = வெளி உலகக் கட்டுப்பாடுகள்! ஆனால்,  அகம்? நம் உள்ளத்துக்கு மட்டுமே நம்மைப் பற்றி, நம் நடிப்பைப் பற்றி நன்கு தெரியும்! அதான், உள்+மை = உண்மை!

எவ்வளவு தான் நுண்ணிய நூல் பல படித்து இருந்தாலும், அதைச் சொற்பொழிவுகளில் மேற்கோள் காட்டினாலும், ஒருவரின் “உண்மை” அறிவே = உள்ளத்து அறிவே மிஞ்சும்!  மற்றவை ஊருக்கு முன், புற வேடங்களே! அதான்…

பொய்ம்மையும் “வாய்”மை இடத்த -என்று சொன்னார் ஐயன்!

பொய்ம்மையும் “உண்”மை இடத்த -ன்னு சொல்லலை பாருங்க?

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின், வாயால் பிறரிடம் பொய் சொல்லலாம்;  அது Exception மட்டுமே; ஆனால் அதை நம் உள்ளம் அறியும் அல்லவா? அதான், பொய்ம்மையும் ‘உண்’மை இடத்த என்று சொல்லவில்லை!  வெறுமனே ‘வாய்’மை இடத்த! வாயோடு முடிந்து போயிற்று; உள்ளத்துக்கும் ஏற்றிக் கொள்ளாதே!

        ஏதோ குற்றமில்லாத நன்மை கருதிச் சொல்லிவிட்டாய் ஒரு பொய்!         அதை வாயோடு விட்டுவிடு!         அதை மெய்யில் ஏற்றி, உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளாதே!         அதுவே வாய்மை - மெய்ம்மை – உண்மையின் நுட்பம்!

ஆங்கிலத்தில் ஒரே சொல், Truth! தமிழில் மட்டும் ஏன் மூன்று? வாய்மை, மெய்ம்மை, உண்மை!.  ஏனெனில் தமிழ், உளவியல் மொழி! உள்ளத்தால் பொய்யாமொழி!

இது “திருக்”-குறள்! திரு மிகுந்த குறள்! உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் குறள்!

மூலக்கதை