மயங்க் அகர்வால் அரைசதம் | அக்டோபர் 10, 2019
புனே: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் துவங்கியது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணியில் பீட் நீக்கப்பட்டு ஆன்ரிச் நார்ட்ஜே அறிமுக வாய்ப்பு பெற்றார்.
மயங்க் அரைசதம்
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆடுகளம் துவக்கத்தில் ‘வேகங்களுக்கு’ கைகொடுத்தது. வாய்ப்பை பயன்படுத்திய ரபாடா, கடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவை, இம்முறை 14 ரன்னில் வெளியேற்றினார்.
பின் இணைந்த மயங்க் அகர்வால், புஜாரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் 4வது அரைசதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.