இந்திய கலாசாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்: அமித் ஷா

தினமலர்  தினமலர்
இந்திய கலாசாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்: அமித் ஷா

கைதல்: ''இந்திய கலாசாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்; அதனால் தான், 'ரபேல்' விமானத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'சஸ்திர பூஜை' செய்ததை எதிர்க்கிறது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ஐரோப்பிய நாடான பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தில் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சஸ்திர பூஜை செய்தார். விமானத்தின் மீது, குங்குமத்தில், 'ஒம்' என, எழுதினார். மலர்கள் துாவியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டார்.

வழக்கம்:

பின், விமானத்தின் டயர்களுக்கு அடியில், எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது. இந்த பூஜைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. 'மத நிகழ்ச்சியான விஜயதசமியும், ரபேல் போர் விமானமும், ஒன்றுக் கொன்று பொருந்தாது. ஒரு மதத்தினர் கொண்டாடும் பண்டிகையை, போர் விமானத்துடன் ஏன் இணைக்க வேண்டும். காங்., ஆட்சியில், 'போபர்ஸ்' பீரங்கிகள் வாங்கப்பட்டன. ஆனால், இது போல் பூஜை செய்யவில்லை' என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம், கைதலில் நேற்று நடந்த, பா.ஜ.,தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது: மத்திய அரசு எதைச் செய்தாலும், அதை எதிர்ப்பது காங்கிரசின் வழக்கமாகிவிட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, காங்., எதிர்த்தது. ஆனால், நாடு முழுதும் மக்கள் வரவேற்றுள்ளனர்.

பாதுகாப்பு:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில், அரசியல் இல்லை. நாட்டின் பாதுகாப்பு கருதியே, இந்த முடிவை, மத்திய அரசு எடுத்தது. இந்திய கலாசாரத்தை பின்பற்றியே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத், ரபேல் விமானத்துக்கு சஸ்திர பூஜை செய்தார். இதையும் காங்கிரஸ் குறை கூறுகிறது. விஜய தசமி அன்று, சஸ்திர பூஜை செய்யக்கூடாதா; காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. அதனால் தான், சஸ்திர பூஜையை எதிர்க்கிறது. இவ்வாறு, அமித் ஷா கூறினார்.

மூலக்கதை