எழும்பூர் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி: பெரும்புதூரில் மக்கள் அச்சம்
பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நுஸ்ரத் நகரை சேர்ந்தவர் இக்பால். இவரது மகள் மெகரின் பானு (8).
பெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் மெகரின் பானு 3ம் வகுப்பு படித்தாள். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கடும் காய்ச்சலால் மாணவி சிரமப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மெகரின் பானுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி மெகரின் பானு பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்துள்ளதால் நுஸ்ரத் நகர் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.