டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்
லாகூர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. அதில், ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வென்றது. கடந்த 5ம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பனுகா ராஜபட்சே 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
இதையடுத்து, 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்கம் சரியாக அமையாததால், 11 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது. கேப்டன் சர்ப்ராஸ் அகமது அதிரடி காட்டியும், 50 ரன்களைக் கடந்தபோது மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
அகமது ஷஸாத் 13, உமர் அக்மல் 0, சர்ப்ராஸ் 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 52 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் திணறியது. ஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் பாட்னர்ஷிப் இணை 6வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
19 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணித் தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதலிரண்டு டி20 ஆட்டத்திலும் வென்றதன் மூலம், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3து டி20 தொடர் நாளை (அக். 9) லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டியிலாவது சொந்த மண்ணில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.