திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும்  இரவில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வந்தார்.

8ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அலைபாயும் மனதை சிதறவிடாமல்  கட்டுப்படுத்தி சரீரம் எனும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி தேவி, பூதேவி  தாயார்களுடன் தேரில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாடவீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தியுடன் சுவாமியை வழிபட்டனர்.
இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.

பிரம்மோற்சவத்தின் நிறைவாக 9ம் நாளான இன்று காலை தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், சந்தனம்,  இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து புஷ்கரணியில் (தெப்பக்குளம்) சக்கரத்தாழ்வார்  தீர்த்தவாரி நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

இன்று மாலை வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் இருந்து  பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட உள்ளது.

இத்துடன் இந்தாண்டு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

.

மூலக்கதை