மோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்

தினமலர்  தினமலர்
மோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்

ஹூஸ்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை பல்வேறு அமைப்பினர் சந்தித்து பேசினர்.

7 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஹூஸ்டன் நகர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர், இன்று அவர், எரிசக்தி துறை நிறுவன சிஇஓக்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, பிரதமர் மோடியை பல்வேறு அமைப்பினர் சந்தித்து பேசினர்.

ஹூஸ்டன் நகரில், சீக்கிய அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மத்திய அரசு எடுத்துள்ள பல முடிவுகளுக்காக பாராட்டு தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை குறித்த விவகாரம், டில்லி விமான நிலையத்திற்கு, குருநானக் தேவ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுதல், இந்திய அரசியல் சாசனத்தில் 25வது பிரிவு, விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன.



இது தொடர்பாக சீக்கிய அமைப்பை சேர்ந்த அர்விந்தர் சாவ்லா கூறுகையில், பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், சீக்கியர்களுக்காக மத்திய அரசு செய்த பணிகளுக்காக நன்றி தெரிவித்து கொண்டோம். கர்தார்பூர் வழிதடத்திற்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தோம். ஹவுடி மோடி கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது, பிரதமர் மோடி எவ்வளவு முக்கியமான தலைவர் என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து தாவூதி போரா அமைப்பினர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு ம.பி.,யின் இந்தூரில், அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தியா வளர்ச்சிக்கும், இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு 7 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினர்.

மூலக்கதை