பிரதமர் அலுவலகத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

தினமலர்  தினமலர்
பிரதமர் அலுவலகத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

புதுடில்லி : பிரதமர் அலுவலகத்தில், இரண்டு அதிகாரிகள், 'பவர்புல்' ஆக இருந்தனர். ஒருவர், நிருபேந்திர மிஸ்ரா; இன்னொருவர், பி.கே.மிஸ்ரா. இவர்கள், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியிலும் அதிகாரிகளாக இருந்தனர். மோடி, மீண்டும் பிரதமர் ஆன பிறகு, நிருபேந்திர மிஸ்ரா நீடிப்பது கடினம் என, பேசப்பட்டது.


சி.பி.ஐ., மூத்த அதிகாரிகளுக்குள் பிரச்னை; அந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை போனது. ரிசர்வ் வங்கி விவகாரம் போன்ற விஷயங்களை, நிருபேந்திர மிஸ்ரா சரியாக கையாளவில்லை என, இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அவர், இந்த ஆட்சியிலும் பதவியில் நீடித்ததோடு, அவருக்கு கேபினட் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் நான்கே மாதங்களில், நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக சொல்லப்பட்டாலும், 'நீங்கள் போய் வாருங்கள்' என, பாசமாக சொல்லப்பட்டதாம்.


இப்போது, பிரதமர் அலுவலகத்தில், பவர்புல் ஆக இருப்பவர், பி.கே.மிஸ்ரா. முதன்மை செயலரான இவருக்கு, அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் மீது, மோடிக்கு அதீத நம்பிக்கை உண்டு. மிஸ்ரா, 1977 பேட்ச், குஜராத் கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மோடி, முதன் முறையாக, குஜராத் முதல்வரான போது, அவருக்கு அரசு சம்பந்தமான பல விஷயங்களை எடுத்துச் சொன்னவர் மிஸ்ரா தான்.

அதனால் தான், அவர் மீது, மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை. மிஸ்ராவைப் போலவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும், பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தோவலுக்கும் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.


மூலக்கதை