மேற்கு வங்க பல்கலை.யில் பரபரப்பு,..மத்திய அமைச்சரின் தலைமுடியை இழுத்து மாணவர்கள் போராட்டம்: ஆளுநர் நேரில் சென்று விசாரணை

தினகரன்  தினகரன்
மேற்கு வங்க பல்கலை.யில் பரபரப்பு,..மத்திய அமைச்சரின் தலைமுடியை இழுத்து மாணவர்கள் போராட்டம்: ஆளுநர் நேரில் சென்று விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவிற்கு எதிராக மாணவர்கள் கருப்பு கொடி காட்டி, உள்ளே விட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ்.சின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று சென்றார். ஆனால்,. பல்கலை.யின் நுழைவு வாயிலில் மாணவர்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் கலாச்சார பிரிவு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுப்ரியோவுக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், அவரை திரும்பி செல்லும்படி முழக்கமிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்கலை நுழைவு வாயிலிலேயே அமைச்சர் காத்திருந்தார். போலீசார் வந்து மாணவர்களை தடுத்து, அமைச்சருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வெளியே வந்த பிறகும் அவருடைய காரை மாணவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சுப்ரியோ கூறுகையில், ‘‘நான் இங்கு அரசியல் செய்வதற்காக வரவில்லை. ஆனால், பல்கலைக் கழகத்தின் சில மாணவர்களின் நடவடிக்கையால் வருத்தம் அடைந்தேன். எனது தலைமுடியை பிடித்து இழுத்தனர். என்னை தள்ளி விட்டனர். இவை அனைத்தும் மிகவும் வருந்தத்தக்கவை. போராட்டக்காரர்கள் அமைதியை குலைக்க முயன்றனர்,” என்றார்.  இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் நேரடியாக பல்கலை கழகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அமைச்சரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.

மூலக்கதை