சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக குற்றச்சாட்டு

துபாய்: சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவுதி அரேபியா குற்றம் சாடியுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14-ம் தேதி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தாக்குதலின் காரணமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான் உலகிலேயே மிகப்பெரியது. இந்த தாக்குதலால் வளைகுடாவில் பதற்றம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, உலக நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என கூறியுள்ளது. இதனால் சவுதி அரேபியா மற்றும் இதர வளைகுடா நாடுகள், பிறநாடுகளின் கச்சா எண்ணெய் தேவையை நிறைவேற்றி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு ஈரான் தான் ஆயுதங்களையும், ஆளில்லா விமானங்களையும் வழங்கி உதவியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ரியாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தி தொடர்பாளர்; துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை காட்சிப்படுத்தினார். இந்த ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் நாட்டின் வடக்கு திடையிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவற்றை ஈரான் தான் வழங்கியது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதியாகியிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் 18 ஆளில்லா விமானங்களும், 7 அதி துல்லிய ஏவுகணைகளும் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மூலக்கதை