சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பை அதிகரிக்க தென்கொரிய அதிபருடன் சவுதி அரேபிய இளவரசர் தொலைபேசியில் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பை அதிகரிக்க தென்கொரிய அதிபருடன் சவுதி அரேபிய இளவரசர் தொலைபேசியில் ஆலோசனை

ரியாத்: வான் பாதுகாப்பை அதிகரிக்க தென்கொரியாவின் உதவியை சவுதி அரேபிய அரசு நாடியுள்ளது. சவுதி அரேபியாவில் அபக் மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் சவுதியில் தினம்தோறும் நடைபெறும் எண்ணெய் உற்பத்தியில் 50 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி இளவரசன் முகமது பின் சல்மான் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவுதி நாட்டு வான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இந்த உரையாடலின் போது, எண்ணெய் கிடங்குகளில் நடத்தபட்ட தாக்குதல்கள் சவுதி அரேபியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த பிரச்சனையை உலக நாடுகள் இணைந்து தீர்க்க வேண்டும் என்றும் தென் கொரிய அதிபர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய முகமது பின் சல்மான்,  ஏவுகணை தாக்குதல் உள்பட அனைத்து விதமான வான்வெளி அச்சுறுத்தல்களிடமிருந்து சவுதி வான் எல்லைகளை பாதுகாக்க ஏவுகணை தடுப்பு கவசங்களை தென் கொரியா வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சவுதி அரேபியாவிடம் ஏற்றுமதி செய்யும்  கச்சா எண்ணெயில் 30 சதவிகிதத்தை தென் கொரியா வாங்குவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை