கருணை காட்டுமா ஜி.எஸ்.டி., கவுன்சில்; வாகனம், ஓட்டல், பிஸ்கட் துறையினர் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
கருணை காட்டுமா ஜி.எஸ்.டி., கவுன்சில்; வாகனம், ஓட்டல், பிஸ்கட் துறையினர் எதிர்பார்ப்பு

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், நாளை நடைபெற உள்ளது. தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை சரி செய்வதற்கான தீவிர முயற்சியில், மத்திய அரசு இறங்கி இருக்கும் நிலையில், இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பல்வேறு துறையினரும் வரி குறைப்பை கோரும் நிலையில், இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வாகனத் துறை, ஓட்டல்கள், பிஸ்கட், தீப்பெட்டி உள்ளிட்ட துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விற்பனை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், வாகன துறையினர், கார்கள் மீதான, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க, கோரி வருகின்றனர்.

மாநில அரசுகள்:
இச்சூழலில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மிகவும் சரியான நேரத்தில் நடைபெற இருப்பதாக வாகன துறையினர் தெரிவிக்கின்றனர்.இன்னும் சில நாட்களில், விழாக் கால விற்பனை துவங்க இருக்கிறது. இக்காலகட்டத்தில், விற்பனையை அதிகரிக்க, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கும்.இந்நிலையில், ஜி.எஸ்.டி., கூட்டத்தில் வரி குறைக்கப்பட்டால், வாகனங்கள் விலை மேலும் குறைந்து, விற்பனை அதிகரிக்கும். நிலைமை சீரடையும் என, கருதுகின்றனர்.

வாகன துறையினர் எதிர்பார்ப்புகள் இப்படி இருக்க, இம்முறை வரி குறைப்பு இருக்காது; குறிப்பாக, கார்களுக்கு இருக்காது என்கின்றனர், உயரதிகாரிகள். ஜி.எஸ்.டி., வருவாயில், வாகன துறையின் பங்களிப்பு மட்டும், 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில், வரி வருவாய் குறைவதை, தற்போதைய பொருளாதார சூழலில், அரசு விரும்பாது. மேலும், மாநில அரசுகளும் தங்களுக்கான வருவாய் பாதிக்கப்படும் என, அஞ்சுகின்றன.

கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், வாகன துறையினருக்கு, ஜி.எஸ்.டி.,யை குறைக்கக் கூடாது என, தெரிவித்துள்ளன. இந்நிலையில், குறிப்பிட்ட காலம் வரையிலான வரி குறைப்பை அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல செய்தி:
ஆனால், வாகன துறையினர், குறிப்பிட்ட கால அளவில் அறிவிக்கப்படும் வரி குறைப்பு, தற்போதைய சிக்கலை தீர்க்க உதவாது. காரணம், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ அறிமுகம் ஆகும்போது, மீண்டும் விலை அதிகரித்து விடும் என்கின்றனர். ஒருவேளை, இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் வரி குறைப்பு அறிவிக்கப்படலாம். இருப்பினும், அரசியல் அழுத்தங்களால், அரசு கார்களுக்கும் வரி குறைப்பு செய்யக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

ஓட்டல் துறையை பொறுத்தவரை, ஆடம்பர ஓட்டல்களுக்கான வரியை குறைக்க வாய்ப்புள்ளது. ஓரிரவுக்கு, 7,500 ரூபாய் அறை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு, சுற்றுலா துறையை மேம்படுத்தும் முனைப்பில் இருப்பதால், 18 சதவீத வரி வகைக்கான, அறை வாடகை உச்ச வரம்பை, 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து அறிவிக்கப்படலாம். இதேபோல், வெளிப்புற உணவு வழங்குனர்களுக்கும், 18 சதவீத வரியை குறைக்கலாம். மேலும், தீப்பெட்டி தொழிலுக்கும், பிஸ்கட்டுக்கும் சலுகைகள் வழங்கப்படலாம். சிமென்ட் மற்றும் ஜவுளிக்கும் ஒருவேளை நல்ல செய்திகள் வரலாம்

.பாவப் பொருட்கள்:
கடந்த மாத, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்ததால், ‘பாவப் பொருட்கள்’ என்றழைக்கப்படும், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு, வரியை கூட்டி, வருவாயை அதிகரிக்கவும் முடிவு செய்யப்படலாம்.

மூலக்கதை