எல்லையில் தாக்குதல் நடத்த பாக்., திட்டம்

தினமலர்  தினமலர்
எல்லையில் தாக்குதல் நடத்த பாக்., திட்டம்

புதுடில்லி : அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வருகிற, 24 முதல், 30 வரை நடக்கவுள்ள, ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தின் போது, ஜம்மு - காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான், பயங்கர தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா - பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், பல்வேறு நாடுகளும், இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன.

பொதுக்குழு கூட்டம்

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24 முதல், 30 வரை, ஐ.நா., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கான் உட்பட, பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டம் நடைபெறும் நேரத்தில், ஜம்மு - காஷ்மீருக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, தாக்குதல் நடத்த, பாக்., ராணுவம் திட்டமிட்டுள்ளதாக, கூறப்படுகிறது.



எதிர்பார்ப்பு

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம், தாக்குதல் நடத்தலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், பிரதமர், மோடியுடன் அமெரிக்கா செல்லவிருந்த பயண திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும், அவர், எல்லைப் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

மிரட்டும் பயங்கரவாதிகள்


ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில், கடைகளை அடைக்குமாறு, பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுக்கும் சுவரொட்டிகளை, 'மார்க்கெட்' பகுதி களில் ஒட்டி வருகின்றனர். வங்கிகளுக்குள் புகுந்து, யாரும் பணிக்கு வரக்கூடாது என, மிரட்டுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத் தில், சில கடைகள், ஹிஜ்புல் பயங்கரவாத அமைப்பின் பெயர் கொண்ட பட்டைகளால், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இது, அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



ஊடுருவல் முறியடிப்பு!


பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஹஜிபிர் என்ற இடத்தில், கடந்த, 10 - 11ம் தேதியில், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற, பாக்., ராணுவ வீரர், குலாம் ரசூல் என்பவரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், 12 - 13ம் தேதிகளில், பாக்., ராணுவத்தின் உதவியுடன், காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற, பயங்கரவாதிகளின் முயற்சியை, பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இந்த 'வீடியோ' காட்சியை, ராணுவம் நேற்று வெளியிட்டது. இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரின், சம்பா மற்றும் கதுவா பகுதிகளில் உள்ள சர்வதேச எல்லை பகுதிகளில், பாக்., படையினர், நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு, இந்திய வீரர்கள் பதிலடி தந்தனர். 'இந்த சம்பவத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என, எல்லை பாதுகாப்பு படை வீரர் தெரிவித்தார்.

மூலக்கதை