பாகிஸ்தானில் இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்: நீதி விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்: நீதி விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவு

கராச்சி: பாகிஸ்தானில் இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நம்ரிதா சாந்தினி என்பவர் பாகிஸ்தானில் கோட்கி நகரை சேர்ந்தவராவார். இவர் லர்கானா மாவட்டத்தில் உள்ள பிபி ஆஸிபா பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது விடுதி அறையில் கதவு வெளியே மூடப்பட்டிருந்த நிலையில் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளார். நம்ரிதா தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடுதி அறையில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் நம்ரிதா சந்தனி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்றும் இது கொலையாகத்தான் இருக்குமென்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மாணவியின் சகோதரர், இது தற்கொலை அல்ல. தற்கொலைக்காக தடயங்கள் வேறு மாதிரி இருக்கும். ஆனால் வயரால் இறுக்கப்பட்டது போல கழுத்தைச் சுற்றி தடயம் உள்ளது. கைகளிலும் தடயம் உள்ளது. இது வயரால் இறுக்கப்பட்ட தடயம். ஆனால் துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், நம்ரிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சிந்து மாகாண அரசு அப்பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இதுகுறித்து மாகாண அதிகாரி அஜீஸ் அலி பட்டி என்பவர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. சாந்தினி தற்கொலை செய்யவில்லை என்று அவரது பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இவரது மரணத்தின் உண்மையை கண்டறிந்து, உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தி கராச்சி உள்ளிட்ட நகரங்களில் போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை