அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 2000 திருநங்கைகள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

தினகரன்  தினகரன்
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 2000 திருநங்கைகள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

குவாஹாட்டி:  அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2000 திருநங்கைகள் விடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியும் இந்த வழக்கின் மனுதாரருமான ஸ்வாதி பிதான் பருவா அசாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெரும்பாலான திருநங்கைகள் பெயர் இடம்பெறவில்லை. இதில் 1971-க்கு முந்தைய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.மேலும் தேசிய குடிமக்கள் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவரை சுட்டிக்காட்ட தனியாக இடம் ஏதும் இல்லை. அவர்கள் ஆண் அல்லது பெண் என்ற இருபாலினங்களையே தேர்வு செய்யும் வகையில் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.அசாமில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 3 கோடி மக்களின் பெயர் இடம்பெற்றிருந்தது மற்றும் 19 லட்சம் பேர் விடுபட்டனர். விடுபட்டவர்கள் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்நிலையில் 2000 திருநங்கைகள் விடுபட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

மூலக்கதை