செங்கல்பட்டு ஜி.ஹெச்.சில் நள்ளிரவில் டாக்டர், எஸ்ஐ, காவலாளியை சரமாரியாக தாக்கிய போதை சட்டக்கல்லூரி மாணவர்: மறியலால் பரபரப்பு; நோயாளிகள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
செங்கல்பட்டு ஜி.ஹெச்.சில் நள்ளிரவில் டாக்டர், எஸ்ஐ, காவலாளியை சரமாரியாக தாக்கிய போதை சட்டக்கல்லூரி மாணவர்: மறியலால் பரபரப்பு; நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர், எஸ்ஐ, காவலாளியை சரமாரியாக தாக்கிய போதை சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள், நர்ஸ்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை அம்பத்தூர் பாடியை சேர்ந்தவர் விக்னேஷ் (29).

ஆந்திராவில் உள்ள ஒரு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். இவர், தனது மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமனார் வீடான செங்கல்பட்டு அழகேசன் நகருக்கு சென்றார்.

நேற்றிரவு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விக்னேஷ் மது அருந்தினார். போதை தலைக்கு ஏறியது.

அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தார்.

சிலரை அடித்தும் உதைத்தார்.

கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அங்கிருந்த குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் விக்னேஷின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இன்று அதிகாலை 1 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விக்னேஷ் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அங்கிருந்த டாக்டர்களிடமும் தகராறு செய்துள்ளார். நர்சுகளை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

உடனே, இரவு காவலாளி ஓடி வந்தார். அவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதையடுத்து அங்கு இரவு காவல் பணியில் இருந்த திருக்கழுக்குன்றம் எஸ்ஐ லிங்கேஸ்வரன் விரைந்தார். அவரையும் சரமாரியாக தாக்கி, சட்டையை கிழித்தார் விக்னேஷ்.

இதனால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களது உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிலர் சமாதானம் செய்ய முயன்றனர். அந்த நேரத்தில் டாக்டரையும் கீழே தள்ளி விட்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து ெசங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விக்னேஷை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

டாக்டர், பயிற்சி டாக்டர்கள், நர்ஸ் ஆகியோரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பணிகளை புறக்கணித்து விட்டு, மருத்துவமனை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மருத்துவமனை டீன் அரிகரன், நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டாக்டர்கள் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இப்போது, வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.

24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் நிறைவேற்றுவதில்லை.

இதற்கு ஒரு முடிவு தெரியும்வரை போராட்டத்தை கைவிட போவதில்லை’ என்று ஆவேசமாக கூறினர். இவர்களுக்கு ஆதரவாக மருத்துவமனை நர்ஸ்கள், ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில் ஆர்டிஓ செல்வம், தாசில்தார் சங்கர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகும் போராட்டம் நீடித்து வருகிறது.

இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை