புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

புதுடெல்லி: மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கரை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, வடதமிழகம்  மற்றும் உள்கர்நாடகவில் அடுத்த 3 நாட்களுக்கு  பரவலாக  கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: \' மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடாவில் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா மற்றும் அந்தமான் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை, காசிமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னையின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மூலக்கதை