மின்னணு தொழில் துறையினரை அமைச்சர் ரவிசங்கர் சந்திக்கிறார்

தினமலர்  தினமலர்
மின்னணு தொழில் துறையினரை அமைச்சர் ரவிசங்கர் சந்திக்கிறார்

சென்னை:மின்னணு துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் நாளை சந்திக்கிறார்.இந்த சந்திப்பில், 'ஆப்பிள், சாம்சங், எல்.ஜி., நோக்கியா, சயோமி, டெல், எச்.பி., பானாசோனிக்' உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


மேலும், இந்த சந்திப்பில், உலகின் மின்னணு தொழிற்சாலையாக, இந்தியாவை மாற்றுவது குறித்தும், துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.மொபைல் போன் தயாரிப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மருத்துவ சாதனங்கள், தொலை தொடர்பு, நுகர்வோர் மின்னணு சாதனங்கள், எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட பல பிரிவுகளை சார்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.



இது குறித்து, தகவல் மற்றும் தொழில் நுட்ப துறையின் செயலர், அஜய் பிரகாஷ் சாவ்னி கூறியதாவது:இத்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் உற்பத்தியை அதிக அளவில் அதிகரிப்பது குறித்தும், வினியோகம், மற்றும் மதிப்பு கூட்டல் குறித்தும் என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கின்றனர் என்பது பற்றி திறந்த மனதுடன் கேட்க இருக்கிறோம். அவர்களது ஆலோசனைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை