பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்

தினமலர்  தினமலர்
பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்

லண்டன்: பிரிட்டனில் கல்வி பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் படிப்பு முடிந்த பின் 2 ஆண்டுகள் பணியில் ஈடுபட விசா வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும் 2 ஆண்டுகள் பணியில் தொடர பணி விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2012ல் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே, அந்த நடைமுறையை ரத்து செய்து 4 மாதங்கள் மட்டும் பணி விசா வழங்கினார்.
இதனால் பிரிட்டனில் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் அடுத்து பிரதமராக வந்த போரிஸ் ஜான்சன் இது குறித்து ஆய்வு செய்து அதில் மாற்றத்தை கொண்டு வந்தார். இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் 4 மாத விசாவை 6 மாதமாகவும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு 1 ஆண்டும் அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள், பட்டம் பெற்றதும் முன்பு போல் 2 ஆண்டுகள் பணி விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூலக்கதை