காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு

ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தில், தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் விளங்குவதாக, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவிப்பை வௌியிட்டது.

இதனை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறி, பல்வேறு அடக்குமுறைகளை மத்திய அரசு கையாளுவதாகவும், மனித உரிமைகள் அங்கு மீறப்படுவதாகவும், அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல நாடுகளின் உதவியை நாடிய நிலையிலும், அது எதுவும் பயனளிக்கவில்ைல. இதற்கிடையே இதுகுறித்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று பொது விவாதம் நடைபெற்றது.

இதில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசும்போது, ‘‘ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம், இந்த பூமி மண்டலத்தின் மிகப்பெரிய திறந்தவெளி சிறையாக அந்த மாநிலத்தை இந்திய அரசு மாற்றி வருகிறது. அந்த அளவுக்கு அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை செயலர் (கிழக்கு) விஜய் தாக்கூர் சிங் பேசுகையில், ‘‘ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370வது சட்டப்பிரிவை நீக்கியது முற்றிலும் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கை.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் தடையிட பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுபவர்கள் அதற்கான உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும்.

உலக அளவில் இன்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் விளங்குகிறது.

எல்லைத் தாண்டிய தீவிரவாத செயல்களின் மூலம் அந்நாடு, இந்தியாவுடன் மாற்று ராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது’’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

.

மூலக்கதை