ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் நீர்மட்டம் 120.74 அடியானது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் நீர்மட்டம் 120.74 அடியானது

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள அருவிகளுக்கு செல்லும் நடை பாதையை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால், ஐவர்பாணி, ஐந்தருவி பகுதிகளில் அருவிகளே தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 8வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நேற்று மாலை முதல் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையம் வழியாக 22,500 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 42,500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நேற்று 120. 70 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 120. 74 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்இருப்பு 94. 65 டிஎம்சியாக உள்ளது.

.

மூலக்கதை