கட்சியினர் தாக்கப்படுவதை கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு வீட்டுச்சிறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சியினர் தாக்கப்படுவதை கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு வீட்டுச்சிறை

திருமலை: தெலுங்கு தேசம் கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, அவரது மகன் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலவுகிறது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அன்று முதல் ஆளுங்கட்சியினர், தெலுங்குதேசம் கட்சியின் கீழ்மட்ட தலைவர்கள், தொண்டர்களை குறி வைத்து தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்நாடு பகுதியில் குரஜாலா, நரசாபுரம், சத்தினப்பள்ளி உள்ளிட்ட பல கிராமங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தால், அங்குள்ள தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் சொந்த ஊரைவிட்டு வெறியேறினர்.

தாக்குதல் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, சொந்த ஊர்களில் இருந்து வெளியேறிய கட்சி தொண்டர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

முகாமில் தங்கியிருந்தவர்களை சமாதானம் செய்து ஊர்களுக்கு அழைத்து செல்ல முயன்ற போலீசாரின் முயற்சிகளும் எடுபடவில்லை.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், நீதி கேட்டும் குண்டூர் அருகே உள்ள ஆத்மகூருக்கு ‘சலோ ஆத்மகூர்’ என்ற பெயரில் ஊர்வலம் இன்று நடைபெறும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சந்திரபாபு நாயுடு, அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேற போலீசார் தடை விதித்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

இதையடுத்து டெலிகான்பரன்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆளும் கட்சியின் போக்கை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தனது வீட்டிலேயே உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் முதல்வரை வீட்டுக்காவலில் வைத்து, எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை