முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி திடீர் மரணம்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி திடீர் மரணம்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி, இன்று காலை காலமானார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை டெல்லியில், இறுதி சடங்கு நடக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், மத்திய சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி (95), கடந்த சில வாரங்களாக வயது முதிர்வின் காரணமாக உடல்நலமில்லாமல் இருந்தார்.

அதனால், கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று காலை 7. 45 மணிக்கு ராம் ஜெத்மலானி காலமானார். 1923ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி இன்றைய பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்தவர்.



இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மும்பை வந்தது அவரது குடும்பம். தனது 18ம் வயதிலேயே சட்டப்படிப்பை முடித்த ஜெத்மலானி, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ராம் ஜெத்மலானி, பாஜ கட்சியில் இணைந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்வானார். 1998ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை மற்றும் நீதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அதன்பின்னர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 2004ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அரசியலில் இருந்து விலகி, வழக்கறிஞர் பணியை தொடர்ந்து மேற்கொண்டார்.

இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ராம் ஜெத்மலானியும் ஒருவர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக் கூடுதலான ஊதியம் பெறும் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கிலும் வாதாடியுள்ளார்.

2010ம் ஆண்டு மீண்டும் அவர் பாஜவுக்கு திரும்பி, மாநிலங்களவை எம்பியாக பணியாற்றினார்.

பாஜ கட்சியில் பிரதமர் மோடி தலைமைக்கு வந்ததும், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்த ராம்ஜெத்மலானி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் வழக்கறிஞர் பணியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

வரும் 16ம் தேதி அவருக்கு 96 வயது தொடங்குகிறது. ராம் ஜெத்மலானிக்கு 1947ல் ரத்தனா என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது.

பின்னர் துர்க்கா என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

அவர்களுள் மகேஷ் மற்றும் இரானி ஆகியோரும் பிரபலமான வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராம் ஜெத்மலானிக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் ேகாவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர்  மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ராம்ஜெத்மலானியின் இறுதி சடங்கு இன்று மாலை டெல்லியின் லோகி சாலையில் உள்ள எரியூட்டும் மையத்தில் நடக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

.

மூலக்கதை