நாளை அதிகாலை 1.40 மணியளவில் நிலவில் தடம் பதிக்கிறது சந்திரயான்-2; விண்வெளி வரலாற்றில் இந்தியா மகத்தான சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை அதிகாலை 1.40 மணியளவில் நிலவில் தடம் பதிக்கிறது சந்திரயான்2; விண்வெளி வரலாற்றில் இந்தியா மகத்தான சாதனை

சென்னை; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 ஆய்வுக்கலன் நாளை தரையிறங்குகிறது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு  என்ற வரலாற்று வெற்றியை இந்தியா பெறும்.

நிலவின் தென் துருவத்தை ஆராய கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஜி. எஸ். எல். வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் நிலவின் மேற்பரப்பில் சுற்றியவாறு ஆய்வு செய்ய ஆர்பிட்டர் கலன், நிலவில் தரை இறங்க லேண்டர் கலன், நிலவின் தரை பகுதியில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் ஆகிய மூன்று கலன்கள் உள்ளது.

ஜி. எஸ். எல். வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து அதில் இருந்த சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டபடி புவியின் சுற்றுவட்டப்பாதையை சுற்றிவந்தது. 6 முறை புவிவட்டப்பாதையில் சுற்றுவந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பு படங்களை எடுத்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.



தொடர்ந்து, சீரான வேகத்தில் புவியின் சுற்றுவட்டப்பாதையை சுற்றிமுடித்த பிறகு ஆகஸ்ட் 14ம் தேதி நிலவை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கியது. அப்போது, நிலவின் வட்டப்பாதைக்கு ஏற்றவாறு விண்கலத்தின் வேகத்தையும், உயரத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து வந்தனர்.

இதையடுத்து, விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து 5 முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்த விண்கலத்தில் இருந்து நிலவில் தரை இறங்தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தநிலையில், லேண்டரின் வேகம் நிலவின் தென் துருவத்தில் தரை இறக்குவதற்கு ஏதுவாக படிப்படியாக குறைத்தும், மாற்றியும் அமைக்கப்பட்டது.



முதல்முறையாக விக்ரம் லேண்டரின் டிஆர்பிட் கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் முறையாக 3ம் தேதி டிஆர்பிட் குறைக்கப்பட்டது.

தற்போது நிலவிற்கு மிகவும் நெருக்கமாக 35 கி. லோ மீட்டர் தூரத்தில் லேண்டர் கலன் உள்ளது. இதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், முக்கிய நிகழ்வான 1,471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு நாளை அதிகாலை (சனிக்கிழமை) 1. 40 மணியளவில் நடைபெற உள்ளது. அப்போது, லேண்டரின் வேகத்தை மெல்ல, மெல்ல குறைத்து அதை நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாக தரை இறக்குவார்கள்.

இது தான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான மற்றும் சவால் நிறைந்த பணியாக விஞ்ஞானிகளுக்கு இருக்கும்.

இதையடுத்து, திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரை இறக்கப்பட்ட உடன் லேண்டரில் உள்ள 27 கிலோ எடை கொண்ட 6 சக்கர வாகனம் பிரக்யான் ரோவர் மெதுவாக நிலவின் தரை பகுதிக்கு கொண்டுவரப்படும்.

சரியாக அதிகாலை 5. 30 மணிமுதல் 6. 30 மணிக்குள் லேண்டரில் இருந்து மெல்ல இறங்கி நிலவில் தடம் பதிக்கும். பிரக்யான் ரோவர் நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட உடன் அதில் உள்ள சோலார் கருவி மின்சக்தி திறனை உள்வாங்கிக்கொண்டு நிலவின் மண்பரப்பை ஆய்வு செய்யும்.

பின்னர் கனிம வளங்கள், நிலவில் அதிர்வுகள் உள்ளிட்டவைகள் குறித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதன்மூலம், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நிலவின் தென் துருவ பகுதியை முழுமையாக தெரிந்துகொள்ள முழு உதவியாக இருக்கும்.

இந்த ரோவர் கலன் நிலவின் தரை பகுதியில் 500 மீட்டர் வரை மெல்ல ஊர்ந்து சென்றே இப்பணிகளை மேற்கொள்ளும்.

மொத்தம் நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும். 14 நாட்கள் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் உள்ள தகவல்களை எடுத்து இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும்.

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் விண்கலம் தரை இறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் 60 மாணவர்களுடன் நேரடியாக பார்வையிட உள்ளார். இதற்காக அவர் இன்று மாலை விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டில் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் முதல் நாடு என்ற வரலாற்று வெற்றியை இந்தியா பதிக்கும்.

சந்திரயான் 2 திட்டம் வெற்றிபெரும் நிகழ்வை இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகளே ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன.

விக்ரம் சாராபாயின் கனவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் மதுரையில் கூறுகையில், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற விக்ரம் சாராபாயின் கனவு, தற்போது சந்திரயான்-2 மூலம் நிறைவேறி வருகிறது. சந்திரனில் நீர்வளம் உள்ளது என உறுதிப்படுத்தியது சந்திரயான்-1.

எந்த நாடும் செய்யாத முயற்சியாக நிலவின் தென்துருவ பகுதியில் நீர்வளம், நிலவளம், கனிம தாதுப்பொருட்கள் இருப்பதை சந்திரயான்-2 உறுதி செய்யும் என நம்பிக்கை உள்ளது. இந்த ஆய்வு திட்டம் நம் நாட்டிற்கு சவாலாக உள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் காலங்களில், மனிதனை சந்திரனுக்கு அனுப்பி திருப்பி பத்திரமாக அழைத்து வரும் நம்பிக்கை நமக்கு உள்ளது. சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் எதிர்கால திட்டத்திற்கு சந்திரயான்-2 படிக்கல்லாக இருக்கும் என்றார்.

பூமிக்கு தகவல் வருவது எப்படி?

சந்திரயான் 2ஐ பொறுத்தவரை 3 கலன்களின் பணி மிக முக்கியமானது.

முதல் கலன் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். நிலவில் தரை இறங்கும் லேண்டர் எனப்படும் 2வது கலனில் இருந்து வெளிவரும் ரோபர்(3வது கலன்) நிலவின் மேற்பரப்புக்கு சென்று தகவல்களை சேகரித்து லேண்டருக்கு அனுப்பும்.

இந்த தகவல்களை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் கலனுக்கு லேண்டர் அனுப்பி வைக்கும். பின்னர் அங்கிருந்து இந்த தகவல்கள் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும்.

சந்திரயான்-2 அதிக காலம் இருக்கும்

சந்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், சந்திரயான் 1 மூலம் முப்பரிமாண படங்கள் எடுத்தோம்.

நீர்வளத்தின் வரைபடம் வரைந்தோம். சந்திரயான் 1ஐ விட 2 அதிக காலம் ஆய்வு செய்யும்.

நீர் வளம் எந்தளவு உள்ளது மற்றும் கனிம வளம் குறித்து சந்திரயான் 2 ஆய்வு செய்யும் என்றார்.

.

மூலக்கதை