உலக கோப்பை தோல்வி கோபம் இன்னும் தீரவில்லை... விற்பனைக்கு வந்தது பாக். வீரரின் ‘அக்கவுன்ட்’
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான், 2017ல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் விளாசினார். இவரது பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்றது.
அதன்பின், பாகிஸ்தான் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வலம் வந்தார். கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.
அதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சொதப்பினார்.
இந்நிலையில், இவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேவையில்லாத மற்றும் சர்ச்சைக்குள்ளான புகைப்படங்கள் வெளியாகின. அதில், ‘இந்த அக்கவுன்ட் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது’ என்ற புகைப்படமும் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
சிலர், ‘ஃபகர் ஜமானுக்கு என்ன ஆனது?’ என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஃபகர் ஜமானின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஏராளமானோர் அவரை பின்தொடர்கின்றனர்.
இதனால், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவரது அக்கவுன்டை சரி செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஃபகர் ஜமானை, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
பாகிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 1,828 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.