ஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்

தினகரன்  தினகரன்
ஒருநாள் அதிகரிப்பு.. மறுநாள் குறைவு.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் குழப்பம்

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏறுவதும், இறக்குவதுமான போக்கு காணப்படுவதால் நகை வாங்குவோர் குழப்பமடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் அதிகரித்து வந்தது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் 26,480, 2ம் தேதி 27,064, 3ம் தேதி 27,328, 5ம் தேதி 27,680, 6ம் தேதி 27,784, 7ம் தேதி 28,376, 8ம் தேதி 28,464, 9ம் தேதி 28,552, 10ம் தேதி 28,656, 12ம் தேதி 28,824, 13ம் தேதி 29,016க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, 13 நாட்களில் மட்டும் சவரனுக்கு 2,536 அளவுக்கு உயர்ந்தது. தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது. அதாவது தங்கம் விலை ஒருநாள் ஏறுவதும், மறுநாள் குறைவதுமான சூழ்நிலை  போக்கு காணப்பட்டு வருகிறது.கடந்த 14ம் தேதி தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் 28,624க்கு விற்கப்பட்டது. மறுநாளே 15ம் தேதி தங்கம் விலை அதிகரித்து சவரன் ₹28,944க்கு விற்கப்பட்டது. 16ம் தேதி தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் 28,664க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி விலை அதிகரித்து ஒரு சவரன் 28,856க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் 3,584க்கும், சவரன் 28,672க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 20 அதிகரித்து ஒரு கிராம் 3,604க்கும், சவரனுக்கு 160 அதிகரித்து ஒரு சவரன் 28,332க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த 14ம் தேதி முதல் ஒருநாள் ஏறுவதும், மறுநாள் குறைவதுமாக இந்த போக்கு நகை வாங்குவோரை சற்று குழப்பம் அடைய செய்துள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தங்கம் விலை இன்னும் சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும். ஒரு நாள் ஏறுவது, மறுநாள் குறைவதுமான போக்கு காணப்படும். இனி வரும் காலங்களில் கிராம் 3600க்கு மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை. விலை இன்னும் அதிகரிக்கும் என்று நகை வாங்குவோரிடையே ஏற்பட்டு வந்த குழப்பத்துக்கு தற்போது விடிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை