இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு

தினகரன்  தினகரன்
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு

* திண்டுக்கல் மாவட்டத்துக்கு மீண்டும் அங்கீகாரம்* இனிப்பான தகவல் என பக்தர்கள், மக்கள் மகிழ்ச்சி பழநி: இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கொடைக்கானல் மலைப்பூண்டை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்துக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமென பக்தர்கள், பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில். பழநி என்றவுடன் பக்தர்கள் மனதில் நினைவிற்கு வருவது  பஞ்சாமிர்தம். மலைத்தேன், மலைவாழை, கரும்பு சர்க்கரை, கற்கண்டு, பேரீச்சை போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம், பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.ரசாயன பொருட்கள் கலக்கப்படாமல் தயாரிக்கப்படும் இப்பஞ்சாமிர்தத்திற்கு, புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் புவிசார் குறியீடு கேட்டு  விண்ணப்பித்தார். பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் தற்போது பழநி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாக புவிசார் குறியீடு அமைப்பின் துணை பதிவாளர் சின்னராஜா ஜி.நாயுடு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுதொடர்பான விவரங்கள் விரைவில் புவிசார் குறியீடு அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோயில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இந்திய அளவில் திருப்பதி லட்டுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்  மலைப்பூண்டுவிற்கு கடந்த ஜூலை 30ம் தேதி புவிசார் குறியீடு கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி பஞ்சாமிர்தம் பழநிக்கே சொந்தம்ஒரு குறிப்பிட்ட புவி சார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி, ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும்.  புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை  தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். இதன்படி பஞ்சாமிர்தம் இனி பழநிக்கு சொந்தமாகி விட்டது.புவிசார் குறியீடு வரிசையில் இணைந்ததுஇந்தியாவில் சுமார் 200 பொருட்களுக்கு மேல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த 57 பொருட்கள் அடக்கம். புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ல் இயற்றப்பட்டு, 2003ல் நடைமுறைக்கு கொண்டு  வரப்பட்டது. தமிழகத்தில் மதுரை மல்லி, சிறுமலை மலைவாழை, காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பவானி ஜமுக்காளம், சேலம் வெண்பட்டு வேஷ்டி, பத்தமடை பாய், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஓவியம், வீணை,  கலைத்தட்டு, ஈரோடு மஞ்சள், சுவாமிமலை வெண்கல சிலை வார்ப்பு, கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பழநி பஞ்சாமிர்தமும் தற்போது சேர்ந்துள்ளது.ஆயக்குடி கொய்யாவுக்கு அடுத்ததாக கிடைக்குமா?பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறுகையில், ‘‘பழநி மலைக்கோயில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தேன். சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக பலமுறை பேசினேன். தற்போது  புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோல் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பழநி அருகேயுள்ள ஆயக்குடி கொய்யாவிற்கும் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மூலக்கதை