இது தேச நலன் சார்ந்த பிரச்சனை: மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் மேம்படுத்தப்படும்...பிரதமர் மோடி பேட்டி

தினகரன்  தினகரன்
இது தேச நலன் சார்ந்த பிரச்சனை: மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் மேம்படுத்தப்படும்...பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய முடிவு எதுவும் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். இரண்டாவது முறையாக பிரதமர்  பதவியேற்று 75 நாட்களை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடியை, தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது முந்தைய ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், 75  நாட்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய பிரதமர் மோடி, சரியான நோக்கங்கள், தெளிவான கொள்கைகள் என்ற அடிப்படையில்  அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சந்திரயான் 2, முத்தலாக் தடைச் சட்டம், நீர் விநியோகம் மற்றும் மேலாண்மைக்காக ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என பல்வேறு  திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைச் சுட்டிக் காட்டிய மோடி, மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறையில் சீர் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய மருத்துவ ஆணைய மசோதா தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மோடி, ஊழலின் மறைவிடமாக இந்திய மருத்துவக் கவுன்சில் விளங்கியதாக நீதிமன்றங்கள் சாடியுள்ளதை சுட்டிக்  காட்டினார். நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தால் தான் தேசிய மருத்துவ ஆணையம்  கொண்டு வரப்பட்டதாகக் கூறினார். தேசிய மருத்துவ ஆணையமானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்றும், மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மருத்துவக் கல்விக்கான கட்டணம் குறையும் என்றும்  தெரிவித்தார். இந்த கல்வி ஆண்டில் 24 புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, மருத்துப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் பிரதர் மோடி தெரிவித்தார். 3 மாவட்டங்களுக்கு ஒரு  மருத்துவக் கல்லூரி இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகிய அடிப்படையில் பள்ளி  கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் குறித்து பேசிய பிரதமர் மோடி, இதைக் காட்டிலும் பெரிய முடிவு ஒன்று இருக்க முடியாது எனக்  குறிப்பிட்டார். சட்டப்பிரிவு 370ம், 35 ஏம் ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் முழுமையாக தனிமைப்படுத்தி விட்டதாகக் குறிப்பிட்ட மோடி, அந்த சட்டப்பிரிவுகளால் என்ன பயன் என்ற அடிப்படைக்  கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.தீவிரவாதிகள் மீது பரிதபம் கொண்டோரும், பரம்பரை அரசியல்வாதிகளும் தான், காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும், இது தேச நலன் சார்ந்த பிரச்சனை என்றும் மோடி கூறினார்.  மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மூலக்கதை