கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு...!

தினகரன்  தினகரன்
கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு...!

திருவனந்தபுரம் : கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கேரளாவில்  கடந்த 2 வாரமாக பெய்து வந்த கனமழையால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு,  மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி உட்பட 8 மாவட்டங்களில் 80க்கும்  மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தொடந்து மழை  பெய்து வந்ததால்  மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் நீடித்தது. பல இடங்களுக்கு  மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மழை சற்று குறைந்துள்ளது.  பல பகுதிகளில்  வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இதனால் பாதிப்புக்கு உள்ளான  பகுதிகளில் மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. நிலச்சரிவு  ஏற்பட்ட மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே புத்துமலை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் தேடுதல் பணி நடந்தது. இதில்  கவளப்பாறையில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. புத்துமலையில் உடல்கள் எதுவும்  கண்டுப்பிடிக்கப்படவில்லை. மலப்புரம் மாவட்டம் கோட்டக்குன்னு  பகுதியில்  நேற்று ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. திருச்சூரில்  மீன்பிடிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற கணவன், மனைவி உள்பட 4 பேர் ஆற்றில்  மூழ்கி இறந்தனர். நேற்று முன்தினம் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர். கவளப்பாறையில் நேற்று  மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து இப்பகுதியில் கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் 36 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதனையடுத்து கடந்த 6 நாட்களில்  பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. கவளப்பாறையில் மண்ணுக்கு அடியில்  சிக்கியதாக கருதப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அருகில் உள்ள  அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.  தற்போதைய  கணக்குப்படி 40 பேர் மண்ணில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இதேபோல புத்துமலையில் 7 பேர் சிக்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  அவர்களை தேடும் பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது. முகாம்களில் 2.75 லட்சம் பேர்: திருவனந்தபுரம், கொல்லம் உள்பட தென் மாவட்டங்களில் பலத்த மழை  பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதையடுத்து நெய்யாறு  அணையின் 4 மதகுகள் தலா ஒரு இன்ச் உயரத்துக்கு  திறக்கப்பட்டன. கனமழை  பெய்தால் அணையை உடனடியாக திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால்  முன்கூட்டியே திறந்து விடப்படுவதாகவும், பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை  எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுபோல  அருவிக்கரை அணையும்  திறக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் முதல் மழை ஓரளவு  குறைந்திருந்தது. ஆனால் நேற்று மதியம் முதல் மலப்புரம், கண்ணூர்,  கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேற்று  மதியத்திற்கு பின்னர் இடுக்கி,  எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று மலப்பு ரம், கோழிக்கோடு  மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு,  கண்ணூர், இடுக்கி மற்றும் காசர்கோடு  மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும்,  எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையை தொடர் ந்து திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு,  மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 9  மாவட்டங்களில் கல்வி  நிறுவனங்களுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட வயநாடு, மலப்புரம்  மாவட்டங்களை நேற்று ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் பினராய் விஜயன்  பார்வையிட்டார். மேலும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்ட  அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசி உள்ளிட்ட இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுவரை உயிரிழந்துள்ள 95 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மூலக்கதை