ஆந்திராவின் நலனை அடகு வைக்கக்கூடாது ஜெகனும், கேசிஆரும் துரோகம் செய்கின்றனர்: சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ஆந்திராவின் நலனை அடகு வைக்கக்கூடாது ஜெகனும், கேசிஆரும் துரோகம் செய்கின்றனர்: சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகனும், தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஆந்திராவுக்கு துரோகம் செய்கின்றனர் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றம்சாட்டினார்.விஜயவாடாவில்  தெலுங்கு தேசம் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு பேசியதாவது:ஆளும் கட்சியினர் நல்ல முறையில் பணிபுரிந்தால் எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிவோம். வன்முறையை தூண்டும் விதமாக பணிபுரிந்தால் போராட்டம் செய்யவும் தயங்க மாட்டோம். பணியிட மாற்றம் மற்றும் மற்ற தேவைகளுக்காக  ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் தாக்குதலுக்கு, போலீசார் அவர்கள் பக்கம் இருப்பது சரியானது அல்ல. சபாநாயகர் தனது பதவிக்கு உண்டான கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல முடிவுகளை எப்பொழுதும்  வரவேற்போம். அதன் ஒரு கட்டமாகவே மத்திய அரசு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை வரவேற்றுள்ளோம். மாநில வளர்ச்சி பணிகளை நிறுத்தி வைப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இலவச மணல் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியபோது பல விமர்சனங்களை செய்தனர். தற்போது அதிக விலைக்கு மணல் விற்பனை செய்வதாக கூறி  வருகின்றனர். இதன் மூலமாக மணலில் யார் ஊழலில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவருகிறது. ஏழைகளுக்கு ₹5க்கு உணவு அளிக்க கூடிய அண்ணா கேன்டீனை மூடி உள்ளனர். பல நலத்திட்ட உதவிகளை ரத்து செய்துள்ளனர். இவை  அனைத்தின் மீதும் போராடுவதற்கு திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். கோதாவரி தண்ணீரை தெலங்கானா நிலப்பரப்பில் கொண்டு சென்று அங்கிருந்து சைலத்திற்கு  கொண்டு வருவது மிகவும் அநியாயம். என்றார்.

மூலக்கதை